logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

முத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது

குருஞான சம்பந்தர் அருளியது

muththi nichchayam in romanized script

சிவ சிவ

சீர்மேவும் ஆரூர்ச் சிதம்பர நாதனெனும்

பேர்மேவு ஞானப் பிரகாசன் - தார்மேவு

சேவடிகள் போற்றித் திகழ்முத்தி நிச்சயமொன்

றாவ தென மொழிவேன் யான்   -       ௧      

 

சந்தான நற்குரவர் தக்கோர் பிறர்சமயம்

நந்தாது தோற்றுவித்த நற்குரவர் - முந்தவே

எந்தமுத்தி சித்தாந்த மென்றார்கள் சைவத்தில்

அந்தமுத்தி நிச்சயிப்போம் யாம்  -       ௨

 

அந்நிலையா னும்பிறவு மான்மாநந் தந்திறமாம்

என்னிலையே சித்திக்கு மென்றியம்பில் - உன்னிலைதான்

இல்லதென வேநீ யியம்பு மளவைமுதல்

சொல்லுமது கேளாய் துணிந்து   -       ௩

 

ஈசன் றனதுசத்தி யின்பருந்து மீசனால்

ஆசறத்தன் சத்தியிலின் பான்மாவு - நேச

முடனருந்து மென்னின் முத்தி யொவ்வாது பாசம்

விடசு துவாய் நிற்பதுவாமே     -       ௪

 

சிற்றின்பம் பேரின்பஞ் சீவகுண மென்றணை நீ

உற்றின் பிரண்டு முணர்ந்திலையோ - சிற்றின்பம்

நாடிற் கருமபல நாதனுருப் பேரின்பம்

நீடிப்ப டிகம்போல் நீ            -       ௫

 

பெறுவானும் பேறுநான் பெம்மானுள் ளுண்டேல்

அறிவாயோ வா நந்த மன்றி - யறிவேனான்

ஆநந்தங் காட்டி யகத்திருப்ப னாகிலது

மானந்தான் கண்டறியாய் மற்று  -       ௬

 

வேதாக மத்தின் விதித்த முத்தி தாளன்றி

நீதானே யின்பமென்றல் நீதியோ - பேதாய்

பெறுவானீ யா நந்தம் பேறென்றுரைத்த

தறியா திருந்தனை நீயாம்       -       ௭

 

உன்னுருவங் கண்டிருப்ப தோகெட்டேன் முத்திசிவன்

தன்னுருவங் கண்டிருக்கத் தக்கதே - முன்னறிஞர்

ஓதுசிவன் தோற்ற மொன்றே காண்பரெனும்

போத மறந்த னையிப் போது    -       ௮

 

ஈசனையே காண லெனத்தவமுன் செய்ததெலாம்

மோசமாய் வந்து முடிந்ததே - பாச

விளையகன்ற போதும் விமலனே நின்றாள்

தனையறியா மூடர்க்குத் தான்    -       ௯

 

தானன்றி நிற்கவெழுஞ் சச்சிதா நந்தனை நீ

யானென் குணமென் னிரும் பென்னோ - ஊனநீ

ஞானகுணம் பெற்றின்னு நாளானென நவிலும்

ஈனகுணம் போன நிலையே      -       ௧0     

 

தோன்று பரமாநந்தச் சோதியன்றி நின்னறிவில்

தோன்று சுக முண்டென்றாய் சுத்தப்பொய் - தோன்று இன்பம்

ஈசனுயிர றிவ தீதன்றி வேறுண்டேல்

பாசமலாதே துண்டு பார் -       ௧௧

 

அண்ணலைப்போ லாநந்த மான்மாவிற் குண்டாகில்

எண்ணில் பிறப் பிறப்பை யெய்துமோ - கண்ணிருளை

ஓட்டாதோ ஆதவனுக் கொத்தவொளி யுண்டாகிற்

கேட்டாயோ கேட்டிலையேற் கேள் -       ௧௨     

 

ஓரின்ப மில்லா துறுமலங்கள் போக்கியிடும்

பேரின்ப நின்குணமென் பேதாய்கேள் - பேரின்பம்

நின்குணம் போல தோன்றுமது நீயாகையான் இரும்பு

தன்குணமோ தீயியல்பு தான்     -       ௧௩

 

ஆசகற்றி நின்னறிவி லாநந்த மாஞ்சிவனைக்

கூசகற்றி யுன்றன் குணமென்று - பேசியிடும்

பேயாவாதிக் கேது பேசிடில் நீ தானந்த

மாயா வா திக்கே மகன்  -       ௧௪

 

என்றும் பிரியா விருளருளா னீங்கவின் பாய்த்

துன்று சிவ போகமெனச் சொல்லாமல் - உன்றன்

நலம் போக மென்றுரைத்தாய் நாமறிவோ நீயு

மலம் போக முத்தியென்பவன்    -       ௧௫

 

தன் பிரம கீதை வேதாந்தஞ் சிவாகம நூல்

இன்பமுயிர்க் குண்டென் றியம்பிய தேல் - இன்பஞ்சீ

வான்மாவிற் குண்டென் றனறந்ததன்று நின்றபர

மான் மாவிற் குண்டென்ற தாம்  -       ௧௬

 

சிவசத்தியைத் திளைப்பர் சீவன்முத்த ரென்னு

மவசத்த மாபா தகமென் - சிவசத்தி

தன் னைப் புணர்ந்ததன்று சாற்றுவமை யுந்தெரியா

தன்னை முலைப் பாலென் றறி   -       ௧௭

 

சிவசத்தி யைத்திலைப்ப ராதிமுத்த ரென்னு

மவசத்த மாபா தகமென் - சிவசத்தி

தன்னைக் கண்டாங் கருளால் சச்சிதாநந்த மெனு

மன்னைத் திளைத்துவாழ் வார்   -       ௧௮

 

அன்றியுயிர் சற்சித்தே யாநந்த மில்லையதற்

கென்று பல வாற்றானு மெய்து விக்க - நின்ற

முறையாலு மீசனொடு முற்றஞ் சமதை

யறையாமை கூறியது மாம்      -       ௧௯

 

ஆநந்த மின்றி யரன்சமதை முத்தியெனிற்

றானந்த வேதாகமஞ் சாற்றா - ஊனம்

படுமே தசகாரியத்திற் பலவுங்

கெடுமே யொன்றா மெனலுங் கேள்       -       ௨0

 

சிவசமமெ முத்தியெனிற் சித்தாந்த மன்றாம்

சிவசமய பேதமெனச் செப்பும் - அவைகளிலே

யொன்றென்பர் வேறெனினு மோரேக தேசமதம்

அன்றெனிற் மற்றோற்கும் அது   -       ௨௧     

 

உள்ள மலநீங்கி யோங்கு சிவாநந்த

வெள்ளத் திளைத்ததுவாய் மேவுதலே - கள்ளவிழ்பூங்

கொத்தார் விரிசடையார் கூறு சிவாகமத்திற்

சித்தாந்த முத்தியெனத் தேறு     -       ௨௨

 

முத்தி நிச்சயம் முற்றிற்று

 

Related Content