logo

|

Home >

saiva-siddhanta >

vinavenpa-kodikkavi-nenchuvidu-thoodhu-and-sivapprakasam

வினா வெண்பா, கொடிக்கவி, நெஞ்சு விடு தூது, சிவப்பிரகாசம்

கொடிக்கவி

நெஞ்சு விடு தூது

சிவப்பிரகாசம்


1. வினா வெண்பா
நூலாசிரியர்: உமாபதி சிவாச்சாரியார்
(காலம்: கி.பி.1308)


இந்நூல் பதின்மூன்று நேரிசை வெண்பாக்களைக் கொண்ட மிகச் சிறிய ஒன்று. இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் நூலாசிரியர் உமாபதி சிவம் தனது ஞானாசிரியர் மறைஞானசம்பந்தரை நோக்கி கேட்கின்ற கேள்விகளாக அமைந்துள்ளன. ஜீவன், முக்தி அடைவதற்கான தன்மைகளை விளக்குவதோடு எத்தன்மையுடையோர் வீடு பேற்றினை அடைய முடியும் என்பதையும் விளக்குகின்றன இப்பாடல்கள். இறைவன் அருளைப் பெற்று நித்திய இன்பத்தைப் பெருவதற்கான வழிகளை இப்பாடல்கள் விளக்குவன என்கின்றார் ஆசிரியர்.

பாடல்கள் 11ம் 13ம் மட்டுமே கேள்விகள் இல்லாமல் தமது கருத்தினைவிளக்குவனவாக அமைந்திருக்கின்றன. இதைத் தவிர்த்து மற்ற பாடல்கள் இறைவனையும், ஆன்ம சொரூபத்தைப் பற்றியும், தனக்குள் இறைசக்தி எவ்வாறு தன்னை வெளிப்படுத்தி நடத்துகின்றது எனபன பற்றியும் தனது ஆசிரியரிடம் கேட்பனவாக அமைந்துள்ளன.

முக்தியாகிய நித்திய இன்பத்தை பெறுகின்றவர், 'காண்பானாகிய' தான் எனும் ஆன்மா, 'காட்டுவான்' ஆகிய இறைவன், 'காணப்படும் பொருள்' ஆகிய மூன்று தத்துவங்களிலிருந்து விலகி பரம்பொருளோடு இரண்டறக்கலந்திருப்பர். இதுவே வீடுபேறு என்கின்றது நூல்.

- நூல் அறிமுகம்: சுபாஷினி கனகசுந்தரம்


வினா வெண்பா

1.
நீடு மொளியு நிறையிருளு மோரிடத்துக்
கூட லரிது கொடுவினையேன் - பாடிதன்மு
னொன்றவார் சோலை யுயர்மருதைச் சம்பந்தா
நின்றவா றெவ்வாறு நீ.

2.
இருளி லொளிபுரையு மெய்துங் கலாதி
மருளி நிலையருளு மானும் - கருவியிவை
நீங்கி லிருளா நிறைமருதச் சம்பந்தா
வீங்குனரு ளாலென் பெற.

3.
புல்லறிவு நல்லுணர்வ தாகா பொதுஞான
மல்லதில துள்ளதெனி லந்நியமாந் தொல்லையிருள்
ஊனமலை யாவா றுயர்மருதைச் சம்பந்தா
ஞானமலை யாவாய் நவில்.

4.
கனவு கனவென்று காண்பரிதாங் காணி
னனவி லவைசிறிது நண்ணா - முனைவனருள்
தானவற்றி லொன்றா தடமருதைச் சம்பந்தா
யானவத்தை காணுமா றென்.

5.
அறிவறிந்த வெல்லா மசத்தாகு மாயின்
குறியிறந்த நின்னுணர்விற்கூடா - பொறிபுலன்கள்
தாமா வறியா தடமருதைச் சம்பந்தா
யாமா ரறிவா ரினி.

6.
சிற்றறிவு முற்சிதையிற் சோர்வாரின் றாஞ்சிறிது
மற்றதனி நிற்கிலருண் மன்னாவாந் துற்றமுகின்
மின்கொண்ட சோலை வியன்மருதைச் சம்பந்தா
வென்கொண்டு காண்பேனி யான்.

7.
உன்னரிய நின்னுணர்வ தோங்கியக்காலொண்கருவி
தன்னளவு நண்ணரிது தானாகு - மென்னறிவு
தானறிய வாரா தடமருதைச் சம்பந்தா
யானறிவ தெவ்வா றினி.

8.
அருவே லுருவன் றுருவே லருவன்
றிருவேறு மொன்றிற் கிசையா - வுருவோரிற்
காணி லுயர்கடந்தைச் சம்பந்தா கண்டவுடல்
பூணுமிறைக் கென்னாம் புகல்.

9.
இருமலத்தார்க் கில்லை யுடல்வினையென் செய்யு
மொருமலத்தார்க் காரை யுரைப்பேன் - திரிமலத்தார்
ஒன்றாக வுள்ளா ருயர்மருதைச் சம்பந்தா
வன்றாகி லாமா றருள்.

10.
ஒன்றிரண்டாய் நின்றொன்றி லோர்மையதா மொன்றாக
நின்றிரண்டா மென்னிலுயிர் நேராகுந் துன்றிருந்தார்
தாங்கியவாழ் தண்கடந்தைச் சம்பந்தா யானாகி
யோங்கியவா றெவ்வா றுரை.

11.
காண்பானுங் காட்டுவதுங் காண்பதுவு நீத்துண்மை
காண்பார் கணன்முத்தி காணார்கள் - காண்பானுங்
காட்டுவதுங் காண்பதுவுந் தன்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்.

12.
ஒன்றி நுகர்வதிவ னூணு முறுதொழிலும்
என்று மிடையி லிடமில்லை - யொன்றித்
தெரியா வருண்மருதைச் சம்பந்தா சேர்ந்து
பிரியாவா றெவ்வாறு பேசு.

13.
அருளா லுணர்வார்க் ககலாத செம்மைப்
பொருளாகி நிற்கும் பொருந்தித் - தெருளா
வினாவெண்பா வுண்மை வினாவாரே லூமன்
கனாவின்பா லெய்துவிக்குங் காண்.

வினா வெண்பாமுற்றும்
 


2. கொடிக்கவி
நூலாசிரியர்: உமாபதி சிவாச்சாரியார்
(காலம்: கி.பி.1310)

நூல் அறிமுக உரை:
-------------------

கொடியேற்றம் என்பது பொதுவாக ஆலயங்களில் கும்பாபிஷேகங்களின் போதும் மற்ற திருவிழாக்களின் போதும் நடைபெருகின்ற ஒரு முக்கியச் சடங்கு. இச்சடங்கின் உட்பொருளை மிக அழகாக சைவ ஆகமத் தத்துவங்களைப் புகுத்தி ஐந்தே பாடல்களில் விளக்குகின்றார்

நூலாசிரியர்.
இந்த நூல் எழக்காரணமாக ஒரு கதையும் உண்டு. திருவிழா சமயத்தில் ஆலய நிர்வாகஸ்தர்கள் கொடியேற்றம் செய்ய, அக்கொடி மேல் நோக்கி ஏறாமல் தடைபட்டுக் கொண்டே வர, அப்பொழுது இறைவனின் ஆணைப்படி உமாபதி சிவம் வந்தால்தான் கொடியேரும் என உணர்த்தப்பட, தில்லைவாழ் அந்தணர்கள் அவரை அழைத்து வருகின்றனர். அவரும் இச்செய்தியைக் கேட்டு, அக்கொடியேற்றத்திற்காக இப்பாடல்கள் ஐந்தினையும் பாடி கொடியினை ஏற்றி வைத்ததாகக் கூறுகின்றன சைவ பரம்பரைக் கதைகள்.

இந்நூல் வடிவில் சிறிதாக இருப்பினும், சைவ சித்தாந்தத்தின் மூலக் கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து பெருமை சேர்க்கின்றது. முக்கியமாக, இறையாகிய பதியும், ஆசைகளுக்கு மூலமான பாசமும் இவை இரண்டும் இருக்கின்ற இடம் பசுவாகிய உயிரினிடத்தில்தான். அப்படி இரண்டும் இருந்தாலும், இறைசக்தியானது, உயிரை பாசங்கள் தாக்கா வண்ணம் அருள் புரிந்து கொண்டே இருக்கின்றது. உயிர் உலகியல் இன்பங்களில் ஈர்க்கப்பட்டு கீழ் நோக்கிச் செல்லாமல், பதியை நோக்கி மேலே செல்ல வேண்டும் என்பதை உணர்த்த இந்தக் கொடியைக் கட்டுகின்றேன் எனப் பாடுகின்றார்.

ஓம் எனும் மூல மந்திரத்திலிருந்து எழுகின்ற ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவய மற்றும் அவற்றிலிருந்து எழுகின்ற மற்ற பல மந்திர அட்சரங்கள், அவற்றிலிருந்து உருவாகும், ஒலிகள், மொழிகள், இவற்றையும் கடந்த மௌன நிலை ஆகிய அனைத்தும் உயிரோடு கலந்திருக்கின்ற பரம்பொருளையே உணர்த்துகின்றன என்கின்றார். இறைசக்தி எல்லையற்ற கருணை கொண்டது. உயிர்கள் மலங்கள் நீங்கி தெளிவு பெற்று, அந்த தெளிந்த அறிவுடனே மாறாமல் இருக்கின்ற நிலையே சிவப்பேறு. இக்கருத்துக்களையே இக்கொடியேற்றம் மறைமுகமாக விளக்குகின்றது என்கின்றது இந்நூல்.

- நூல் அறிமுகம்: சுபாஷினி கனகசுந்தரம்


கொடிக்கவி

1.
ஒளிக்கு மிருளுக்கு மொன்றே யிடமொன்று மேலிடிலொன்
றொளிக்கு மெனினு மிருளட ராதுள் ளுயிர்க் குயிராய்த்
தெளிக்கு மறிவு திகழ்ந்துள தேனுந் திரிமலத்தே
குளிக்கு முயிரருள் கூடும் படிக் கொடி கட்டினனே.

2.
பொருளாம் பொருளேது போதேது கண்ணே
திருளாம் வெளியே திரவே - தருளாளா
நீபுரவா வையமெலா நீயறியக் கட்டினேன்
கோபுர வாசற் கொடி.

3.
வாக்காலு மிக்க மனத்தாலு மெக்காலுந்
தாக்கா துணர்வரிய தன்மையனை - நோக்கிப்
பிறித்தறிவு தம்மிற் பிறியாமை தானே
குறிக்குமரு ணல்கக் கொடி.

4.
அஞ்செழுத்து மெட்டெழுத்து மாறெழுத்து நாலெழுத்தும்
பிஞ்செழுத்து மேலைப் பெருவெழுத்தும் நெஞ்சழுத்திப்
பேசு மெழுத்துடனே பேசா வெழுத்தினையுங்
கூசாமற் காட்டக் கொடி.

5.
அந்த மலமறுத்திங் கான்மாவைக் காட்டியதற்
கந்த அறிவை அறிவித்தங் - கிந்தறிவை
மாறாமல் மாற்றி மருவு சிவப் பேறென்றுங்
கூறாமல் கூறக் கொடி.

முற்றும்


 

3. நெஞ்சு விடு தூது
நூலாசிரியர் : உமாபதி சிவாச்சாரியார்
(காலம்: கி.பி.1311)


நூல் அறிமுகம்:
இந்நூலின் செய்யுட்கள் கலிவெண்பா வகையைச் சேர்ந்தவை. அகப் பாடல்களில் அன்னத்தை தூது விட்டு தனது மனதின் எண்ணங்களை காதலனுக்கோ காதலிக்கோ தெரிவிப்பது போல பாடல்கள் அமைந்திருக்கும். அந்த வகையில் நூல் ஆசிரியர் தனது ஞானாசிரியனை தலைவனாக நினைத்து தன்னை காதலியாக பாவித்து தனது மனதை தலைவனின் அன்பையும் அருளையும் பெற்று வர தூது அனுப்புவதாக இந்நூல் அமைந்துள்ளது.

இங்கு தலைவனாக அமைந்திருப்பவன் இறைவனே! ஆகையால் அவனது பெருமைகள் சிறப்புற விளக்கப்படுகின்றன. சைவ சித்தாந்த கொள்கைகள் இங்கு மேலும் விரிவாக பயன்படுத்தப்படுகின்றன. பதியின் இயல்பு, பசு, பாச இயல்பு ஆகியவை செய்யுட்களில் விளக்கப்படுகின்றன. பொதுவாக இப்பாடல்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, முதற்பகுதியில் இறைவனின் பெருமையயும், பாசங்களால் பந்திக்கப்பட்டு சிற்றறிவுடன் இருக்கும் உயிரின் தன்மைகளையும்ளைப்பகுதியில் விளக்குகின்றார்.

இரண்டாம் பகுதியை தனது தலைவனாகிய இறைவனின் புகழைக் கூறும் வகையில் தசாங்கங்களாக வடித்து அவற்றின் இயல்பைக் கூறுகின்றார். மூன்றாம் பகுதியில் இறைவனை அடைகின்ற நோக்கில் இடையிலேயே மனம் குழம்பி மாயாவாதம், உலோகாயுதம், சமணம், பௌத்தம், ஸ்மார்த்தம் ஆகிய கொள்கைகளில் செல்லாமல் குறிக்கோள் மாறாமல் தனது தலைவனை அடைந்து அவனின் அருளைப் பெற வேண்டும் என்று விளக்குகின்றார்.

திருவள்ளுவர், திருவுந்தியார், திருஞானசம்பந்தர் ஆகியோரின் தாக்கங்கள் பாடல்களில் தெரிகின்றன. தெய்வப் புலமை கொண்ட நூலான திருக்குறள் உலக வாழ்க்கையை சிறப்புற வாழ்வதற்கு உதவும் நூல் என்பதையும் தனது பாடல் வரிகளில் குறிப்பிடுகின்றார்.

இந்நூலின் இறுதி அங்கமாக தனி வென்பா ஒன்றினை முழுக்கருத்தையும் விளக்கும் வகையில் நூலாசிரியர் அமைத்திருக்கின்றார். சைவ சித்தாந்தத்தின் சாரத்தை வித்தியாசமான முறையில் கூறும் சிறப்பு இந்நூலுக்கு உண்டு.

- நூல் அறிமுகம்: சுபாஷினி கனகசுந்தரம்

 


நெஞ்சு விடு தூது

இறைவனியல்பு

பூமேவு முந்திப் புயல்வண்ணன் பொற்பமைந்த
நாமேவு மாதுபுணர் நான்முகத்தோன் - றாமேவிப்
பன்றியு மன்னமுமாய்ப் பாரிடத்தும் வான்பறந்து
மென்று மறியா வியல்பினா - னன்றியும்
இந்திரனும் வானோரு மேனோரு மெப்புவியு
மந்தர வெற்பு மறிகடலு - மந்திரமும்
வேதமும் வேத முடிவும்விளை விந்துவுடன்
நாதமுங் காணா நலத்தினா - னோத
வரியா னெளியா நளவிறந்து நின்ற
பெரியான் சிறியான்பெண் பாகன் - தெரியா
வருவா னுருவா னருவுருவு மில்லான்
மரியான் மரிப்பார் மனத்தான் - பரிவான
மெய்யர்க்கு மெய்யன் வினைக்குவினை யாயினான்
பொய்யர்க்குப் பொய்யாப்பொய் யாயினா - னையன்
படநாகம் பூண்ட பரமன் பசுவின்
இடமாய் நிறைந்த விறைவன் - சுடரொளியான்

உயிரியல்பு

என்றுமுள னன்றளவுமி யானு முளனாகி
நின்றநிலை யிற்றரித்து நில்லாமற் - சென்று சென்று
தோற்றியிடு மண்டஞ் சுவேதங்கண் மண்ணின் மேற்
சாற்றுமுற் பீசங் சராயுசங்கட் - கேற்றபிறப்
பெல்லாம் பிறந்து மிறந்து மிருவினையின்
பொல்லாங்கு துய்க்கும் பொறியிலியேன் - கல்லா
உணர்வின் மிசையோ டுலகா யதனைப்
புணர்வதொரு புல்லறி பூண்டு - கணையிற்
கொடிதெனவே சென்று குடிபழுதே செய்து
கடிய கொலைகளவு காமம் - படியின்மிசைத்
தேடி யுழன்று தெரிவைத் தெரியாமல்
வாடி யிடையு மனந்தனக்கு - நாடியது
போன வழிபோகும் புந்திக்கும் புந்தியுடன்
ஆன திறலா ரகந்தைக்கு - மேனி
யயர வயர வழிய வழியும்
உயிரின் றுயர முரையேன் - வயிரமே

தளையினியல்பு

கொண்டதொரு காமனுக்கும் கோபனுக்கும் மோகனுக்கும்
மண்டு மதமாச் சரியனுக்கும் - திண்டிறல்சேர்
இந்திரியம் பத்துக்கு மீரைந்து மாத்திரைக்கும்
அந்தமிலாப் பூதங்க ளைந்தினுக்கும் - சிந்தைகவர்
மூன்றுகுற்ற மூன்றுகுணம் மூன்றுமலம் மூன்றவத்தை
யேன்றுநின்று செய்யு மிருவினைக்குந் - தோன்றாத
வாயுவொரு பத்துக்கும் மாறாத வல்வினையே
யாய கிளைக்கு மருநிதிக்கும் - நேயமாம்

இச்சை கிரியை யிவைதரித்திங் கெண்ணிலா
வச்சங் கொடுமை யவைபூண்டு - கச்சரவன்
சீரினிலை நில்லாமல் திண்டாடும் பல்கருவி
வாரியகப் பட்டு மயங்கினேன் - தேருங்கால்
உன்னை யொழிய வுறவில்லை யென்னுமது
தன்னை யறிவைத் தனியறிவை - முன்னந்
தலைப்பட்டார் மற்றை யவரென்று - நிலைத்தமிழின்
தெய்வப் புலமைத் திருவள் ளுவருரைத்த
மெய்வைத்த சொல்லை விரும்பாமல் - ஐவர்க்கு

மாவதுவே செய்தங் கவர்வழியைத் தப்பாமல்
பாவமெனும் பௌவப்பரப்பழுந்திப் - பூவையர்தம்
கண்வலையிற் பட்டுக் கலவிக் கலைபயின்றங்
குண்மை யறிவுணர்ச்சி யோராமல் - திண்மையினால்
நாவிற் கொடுமை பலபிதற்றி நாடோ றும்
சாவிற் பிறப்பிற் றலைப்பட்டிங் - காவிநிலை
நிற்கும்வகை பாராய் நிலையான நெஞ்சமே
பொற்பினுடன் யானே புகலக்கேள் - வெற்பின்மிசை

இறைவனது நிலை

வந்திருக்க வல்லான் மதியாதார் வல்லரணஞ்
செந்தழலின் மூழ்கச் சிரித்தபிரான் - அந்தமிலா
வேத முடிவில் விளைவில் விளைவிலொளி
யாதி யமல நிமலனருட் - போத
அறிவிலறிவை யறியு மவர்கள்
குறியுள் புகுதுங் குணவ - னெறிகொள்
வெளியில் வெளியில் வெளியன் வெளியி
லொளொயி லொளொயி லொளியன் - ஒளியி
லளியி லளியி லளிய னளியில்
அளவி லளவி லளவன் - அளவிறந்து
நின்றா னனைத்து நிறைந்தா நினைப்பவர்பாற்
சென்றான் தெரியத் தெரியாதான் - குன்றா

விளக்காய் நிறைந்த விரிசுடரான் விண்மேற்
றுளக்காம நின்றபெருஞ் சோதி - யுளக்கண்ணுக்
கல்லாது தோன்றா வமல னகிலமெலா
நில்லாம நின்ற நிலையினான் - சொல்லாரு
மீசன் பெருமை யிருவினையே னுன்றனக்குப்
பேசுந் தகைமையெலாம் பேணிக்கேள் - பாசம்

தசாங்கம்:-

1.மலை

பலவுங் கடந்து பரிந்தருள்சேர் பண்பாற்
குலவி விளங்குகுணக் குன்றோ - னிலகவே

2.ஆறு

செய்ய தருமச் செழுங்கிரியின் மீதிழிந்து
வையம் பரவ மகிழ்ந்தெழுந்தங் - கையம்

களவுபயங் காமங் கொலைகோபங் காதி
அளவில்வினை யெல்லா மழித்திங் - குளமகிழத்
தொம்மெனவே யெங்கு முழங்கிச் சுருதிபயில்
செம்மைதரு மாகமங்கள் சேர்ந்தோடி - மும்மலத்தின்
காடடங்க வேர்பறித்துக் கல்விக் கரைகடந்தங்
கோடுபல பூதத் துணர்வழித்து - நீடுபுகழ்
மெய்வாய்கண் மூக்குச் செவியென்னப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை யவாவழித்து - நையுமியல்
வாக்குப்பா தம்பாணி பாயுருபத் தம்பலவு
நீக்கிச் செறிந்து நிறைந்தோடிப் - போக்கரிய

பந்தமெனுஞ் சோலை பறித்துப் பரந்தலைக்கு
மந்தமனம் புத்தியுட னாங்காரஞ் - சிந்தைவிழ
மோதி யலைக்கு மருணீர்மை முக்குணமுங்
காதி யுரோமமெலாங் கைகலந்து - சீதப்

புளக மரும்பிப் புலன்மயக்கம் போக்கி
விளைவில் புலன்முட்ட மேவிக் - களபதன
மாதர் மயக்க மழித்துவளர் மண்டலத்தின்
சோதியொரு மூன்றினையும் சோதித்து - நீதியினால்
ஆதார மாறினுஞ்சென் றாறியடல் வாயுக்கண்
மீதான பத்து மிகப்பரந்து - காதிப்

பிறுதிவியப் புத்தேயு வாயுவா காய
வுறுதி நிலமைந்து மோடி - மறுவிலா
நான்முகன்மா லீசன் மகேச நலஞ்சிறந்த
தான்முக மைந்தாஞ் சதாசிவமு - மானதொரு
விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில்
அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரு
மவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்ட முள்ளாக்கிச்
செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்தங்- கெவ்வறிவுந்
தானாய வீடருளித் தன்னிற் பிரிவில்லா
வூனாகி யெவ்வுயிர்க்கு முட்புகுந்து - மேனியிலா

வஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே
தஞ்சமெனச் சென்று தலைப்பட்டு - வஞ்சமறத்
தானந்த மில்லாத தண்ணளியா லோங்கிவரு
மானந்த மென்பதோ ராறுடையான் - ஆனந்தம்

3. நாடு

பண்ணும் பயன்சுருதி யாகமங்கள் பார்த்துணர்ந்து
நண்ண வரியதொரு நாடுடையான் - எண்ணெண்

4. ஊர்

கலையா லுணர்ந்து கருத்தழிந்து காம
நிலையான தெல்லாமும் நீத்தங் - கலைவறவே
தேட்டற்ற சிந்தை சிவஞான மோனத்தால்
ஓட்டற்றுவீற்றிருக்கு மூருடையான் - நாட்டத்தால்

5. தார்

தெண்ணீ ரருவிவிழச் சிந்தைமயக் கந்தெளிந்
துண்ணீர்மை யெய்தி யுரோமமெலா - நண்ணும்
புளகம் புனைமெய்யர் பொய்யிற்கூ டாமல்
உளகம்பங் கொண்டுள் ளுருகி - யளவிலா
மாலா யிருக்கு மவர்மனத்தை வாங்கவருன்
மேலாய் விளங்கலங்கன் மெய்யினான் - தேலாத

6. குதிரை

வானம் புவன மலைகடலேழ் பாதாள
முனைந்து பூதத் துயிருணர்ச்சி - ஞானமா
யெல்லாமா யல்லவா யெண்ணுவாரெண்ணத்துள்
நில்லாம னிற்குநீள் வாசியான் - சொல்லாரும்

7. யானை

பாதாள மூடுருவிப் பாரேழும் விண்ணேழு
மாதார மாகி யகண்டநிறைந் - தோத
அரிதா யெளிதா யருமறையா றங்கத்
துருவா யுயிரா யுணர்வாய்ப் - பெரிதாய
வெய்யதுயர்ப் பாசமற வீசியே வெம்பிறவித்
துய்ய கடலைத் துகளெழுப்பி - யையமுறுங்
காமக் குரோத மத மாச்சரியங் காய்ந்தடர்த்துச்
சாமத் தொழிலின் றலைமிதித்து - நாமத்தாற்
கத்துஞ் சமயக் கணக்கின்விறற் கட்டழித்துத்
தத்தம் பயங்கொலைகள் தாங்கழித்தே - தத்திவரும்
பாசக் குழாத்தைப் படவடித்துப் பாவையர்த
மாசைக் கருத்தை யறவீசி - நேசத்தா
லானவே கங்கொண் டருண்மும் மதத்தினா
லூனையார் தத்துவங்க ளுள்புகுந்து - தேனைப்
பருகிக் களித்துயர்ந்து பன்மறைநாற் கோட்டான்
மருவித் திகழ்ஞான வானையா - னிருமுச்

8. கொடி

சமையங் கடந்து தனக்கொப் பிலாத
சுமைதுன்ப நீக்குந் துவசன் - கமையொன்றித்

9. முரசு

தம்மை மறந்து தழலொளியுள் ளேயிருத்தி
இம்மை மறுமை யிரண்டகற்றிச் - செம்மையே
வாயுவை யோடா வகைநிறுத்தி வானத்து
வாயுவையு மாங்கே யுறவமைத்துத் - தேயுறவே
என்று மொறுதகைமை யாயிருக்கு மின்பருளே
நின்று முழங்கு நெடுமுரசோன் - அன்றியும்

10. ஆணை

மாலு மயனும் வகுத்தளித்த வையமெலாஞ்
சாலுமிதற் கப்பாலு மெப்பாலு - மேலை
யுலகு முலகா லுணரவொண்ணா வூரு
மிலகி நடக்குமெழி லாணையான் - அலகிறந்த

இறைவன் பெருமை

காட்சியான் காட்சிக்குங் காணான் கலைஞான
வாட்சியா னாட்சிக்கு மாயிலான் - சூட்சியான்
பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான்
றூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி
வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச்
சத்தாதி பூதங்க டாமாகிச் - சுத்த
வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பா
லுறுபொருளாய் நின்ற வொருவன் - பொறியிலியேன்

ஞானாசாரியார்

வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனியென் றம்பிரா - னம்புவியோர்
போற்றுந்திருவடியென் புன்றலைமீதே பொறித்தோ
நேற்றின் புறத்தமைத்த வெங்கோமான் - சாற்றுவார்

சாற்றும் பொருளான் றனிமுதல்வன் றனல்லான்
வேற்றின்ப மில்லா விளங்கொளியான் - போற்றுங்
குருவேட மாகிக் குணங்க்குறியொன் றில்லாப்
பெருவேட மாய்நிறைந்த பெம்மான் - கருவேடங்
கட்டுமுருக் கட்டறுத்தான் கற்றவர்வாழ் தில்லையா
நெட்டுமவர்க் கெட்டா வியல்பினான் - மட்ட வீழ்தார்

குரூபதேசம்

வானோன் பவனி வரக்கண்டு வல்வினையே
னேனோரு மேத்துதல்கண் டேத்தினேன் - றானென்னைப்
பார்த்தான் பழையவினைப் பஞ்சமலக் கொத்தையெல்லாம்
நீத்தா நினைவே றாக்கினா - னேத்தரிய

தொண்ணூற்றறுவர் பயிறொக்கிற்றுவக்கறுத்தான்
கண்ணூறு தேனமுதங் காட்டினான் - வெண்ணீறும்
வேடமும் பூசையுமே மெய்யென்றான் பொய்யென்றான்
மாடையும் வாழ்க்கை மனையுமே - நாடரிய

வஞ்செழுத்தி னுள்ளீ டறிவித்தா னஞ்செழுத்தை
நெஞ்செழுத்தி நேய மயலாக்கி - யஞ்செழுத்தை
யுச்சரிக்குங் கேண்மை யுணர்த்தியதி லுச்சரிப்பு
வைச்சிருக்கு மந்த வழிகாட்டி - யச்சமறச்
சென்று விளக்கை யெழத்தூண்டிச் செஞ்சுடரி
னொன்றி யொருவிளக்கி னுள்ளொளியாய் - நின்ற

பெருவிளக்கின் பேரொளியி னுள்ளே பிரச
மருவு மலர்போன் மதித்தங் - கருவினிருக்
கொள்ளா வருளைக் கொளுத்திக் குணங்குறியொன்
றில்லா விடத்தே யளைப்பாற்றி - விள்ளாத
வுள்ள முதலாக வுற்றதெல்லாம் வாங்கவருள்
வெள்ள மயலளித்து மேவினான் - கள்ள
மறப்பித்தான் மெய்ஞ்ஞான மாக்கிமன மெல்லா
மிறப்பித்தா னென்பிறவி யீர்த்தான் - விறற்சொல்லுக்
கெட்டானை யார்க்கு மெழுதா வியற்குணங்க
ளெட்டானை யாற்றா வெழுத்தினான் - மட்டாரும்

பாடலா ராடலார் பண்பலார் நண்பலா
ராடலா ராட லகன்பதியாங் - கூடலார்
காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான்
பாணர் கிலகு பலகையிட்டான் - சேணிற்
சிறந்த வுருவான் றிலுமாக் கெட்டா
நிறைந்த திருவருவாய் நிற்போன் - கறங்குடனே
சூறைசுழல் வண்டு சுழல்கொள்ளி வட்ட மன
மாறில் கருணையினான் மாற்றினா - ணீறணிந்த
மெய்ய னமல னிமலனருள் வீடளிக்கு
மையனறி வுக்கறி வாயினான் - பொய்யாற்பாற்
பொய்மையாய் நின்றான் புரிந்தவர்தந் நெஞ்சத்துண்
மெய்மையாய் நின்று விளங்கினான் - கைமழுவா
னத்தன்பால் நீசென் றடையு மிடத்தையெல்லாஞ்

அடையும் இடம்

சித்தஞ்சேர் நெஞ்சமே செப்பக்கேள் - நித்தலுமே
பூசிமுடித் துண்டுடுத்துப் பூங்குழலார் தங்கலவி
யாசைதனிற் பட்டின்ப வார்கலிக்கு - ணேசமுற
நின்று திளைக்கு மிதுமுத்தி யல்லதுவே
றொன்று திளைக்கு மதுமுத்தி - யன்றென்
றிகலா விருளலகை போலிகலே பேசு
முலகா யதன்பா லுறாதே - பலகாலுந்

தாம்பிரமங் கண்டவர்போற் றம்மைக்கண்டாங்கதுவே
நான்பிரம மென்பவர்பா நண்ணாதே - யூன்றனக்குக்
கொன்றிடுவ தெல்லாங் கொலையல்ல வென்றுகுறித்
தென்றுமற மேதெய்வ மென்றென்று - வென்றிப்
பொறையே யெனும்புத்தன் பொல்லாத புன்சொன்
மிறையே விரும்பி விழாதே - நிறைமேவி
வாழ்பவர்போன் மண்ணுடலின் மன்னுமுரோ மம்பறித்துத்
தாழ்வுநினை யாதுதுகில் தானகற்றி - யாழ்விக்கு
மஞ்சு மகற்று மதுமுத்தி யென்றுரைக்கும்
வஞ்சமணன் பாழி மருவாதே - செஞ்சொல்புனை

யாதிமறை யோதி யதன்பயனென் றும்மறியா
வேதியர்சொன் மெய்யென்று மேவாதே - யாதியின்மே
லுற்றதிரு நீருஞ் சிவாலயமு முள்ளத்துச்
செற்ற புலையற்பாற் செல்லாதே - நற்றவஞ்சேர்
வேடமுடன் பூசையருண் மெய்ஞ்ஞான மில்லாத
மூடருடன் கூடி முயங்காதே - நீட
வழித்துப் பிறப்ப தறியா தரனைப்
பழித்துத் திரிபவரை பாராதே - விழித்தருளைத்
தந்தெம்மை யாண்டருளுஞ் சம்பந்த மாமுனிவ
னந்தங் கடந்தப்பா லாய்நின்றோ - னெந்தைபிரான்

வீற்றிருக்க மோலக்க மெய்தியடி வீழ்ந்திறைஞ்சிப்
போற்றி சயசய போற்றியென - வார்த்தகரி
யன்றுரித்தாய் நின்பவனி யாதரித்தா ரெல்லாரும்
வென்றிமதன னம்புபட வீழ்வரோ - நின்றிடத்து

நில்லாத செல்வ நிலையென் றுனைநீங்கிப்
பொல்லா நரகம் புகுவரோ - பல்லாருங்
கத்துஞ் சமயக் கணக்கிற் படுவரோ
சித்தம் பலகாற் றிகைப்பரோ - முத்தம்
பொருத நகைமடவார் புன்கலவி யின்ப
மருவி மயங்கி வருவரோ - விருபொழுது

நாளிருபத் தேழு நவக்கிரக மும்நலியுங்
கோளிதுவென் றெண்ணிக் குறிப்பரோ - வேளை
யெரித்த விழியாய்நின் னின்பக் கடற்கே
தரித்து மதிமறந்த தையல் - வருத்தமெலாந்
தீரா யெனவுரைத்துச் செங்கமலப் பூந்திருத்தா
டாரா யெனப்பலகால் தாழ்ந்திறைஞ்சி - யேராரும்
பூங்குன்றை வாங்கிப் புகழ்ந்துபுரி நெஞ்சமே
யீங்கொன்றை வாரா யினி.

வெம்பும் பிறவியலை வீழாமல் வீடளித்த
சம்பந்த மாமுனிவன் தார்வாங்கி - அம்புந்தும்
வஞ்சமே வும்விழியார் வல்வினையெல் லாமகல
நெஞ்சமே வாராய் நினைத்து.

முற்றும்


 

 

4. சிவப்பிரகாசம்
நூலாசிரியர்: உமாபதி சிவம்
(காலம்: 1306)

பாயிரம்

[காப்பு]

ஒளியான திருமேனி உமிழ்தான மிகமேவு
களியார வருமானை கழல்நாளு மறவாமல்
அளியாளும் மலர் தூவும் அடியார்க ளுளமான
வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே. 

நடராசர் துதி

ஓங்கொளியாய் அருண்ஞான மூர்த்தி யாகி
உலகமெலாம் அளித்தருளும் உமையம்மை காணத்
தேங்கமழும் மலரிதழி திங்கள் கங்கை
திகழரவம் வளர்சடைமேல் சேர வைத்து
நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள்
நின்றிமையோர் துடி செய்ய நிருத்தஞ் செய்யும்
பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்
புந்தியினு முறவணங்கிப் போற்றல் செய்வாம்.  1 

சிவகாமியம்மை துதி

பரந்தபரா பரையாதி பரன திச்சை
பரஞானம் கிரியைபர போக ரூபம்
தருங்கருணை உருவாகி விசுத்தா சுத்தத்
தனுகரண புவனபோ கங்கள் தாங்க
விரிந்தவுபா தானங்கண் மேவி யொன்றாய்
விமலாய் ஐந்தொழிற்கும் வித்தாய் ஞாலத்
தரந்தைகெட மணிமன்றுள் ஆடல் காணும்
அன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.  2 

விநாயகர் துதி

நலந்தரல்நூ லிருந்தமிழின் செய்யுட் குற்றம்
நண்ணாமை இடையூறு நலியாமை கருதி
இலங்குமிரு குழையருகு பொருதுவரி சிதறி
இணைவேல்க ளிகழ்ந்தகயற் கண்ணியொடு மிறைவன்
கலந்தருள வருமானை முகத்தான் மும்மைக்
கடமருவி யெனநிலவு கணபதியின் அருளால்
அலர்ந்துமது கரமுனிவர் பரவவளர் கமல
மனைதிரு வடியினைகள் நினைதல் செய்வாம்.  3 

முருகக்கடவுள் துதி

வளநிலவு குலவமரர் அதிபதியாய் நீல
மயிலேறி வருமீச னருள்ஞான மதலை
அளவில்பல கலையங்கம் ஆரணங்கள் உணர்ந்த
அகத்தியனுக் கோத்துரைக்கும் அண்ணல்விறலெண்ணா
உளமருவு சூரனுரம் எமதிடும்பை யோங்கல்
ஒன்றிரண்டு கூறுபட வொளிதிகழ்வேல் உகந்த
களபமலி குறமகள்தன் மணிமுலைகள் கலந்த
கந்தன்மல ரடியிணைகள் சிந்தை செய்வாம்.  4 

சந்தான பரம்பரை

தேவர்பிரான் வளகயிலைக் காவல் பூண்ட
திருநந்தி யவர்கணத்தோர் செல்வர் பாரிற்
பாவியசத் தியஞான தரிசனிகள் அடிசேர்
பரஞ்சோதி மாமுனிகள் பதியா வெண்ணை
மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா
விரவுபுகழ் அருணந்தி விறலார் செல்வத்
தாவிலருள் மறைஞான சம்பந்தர் இவரிச்
சந்தானத் தெமையாளும் தன்மை யோரே.  5

குரு வணக்கம்

பார்திகழ வளர்சாம வேத மல்கப்
பராசரமா முனிமரபு பயில ஞானச்
சார்புதர வந்தருளி எம்மை யாண்ட
சைவசிகா மணிமருதைத் தலவன் அந்தன்
கார்மருவு பொழில்புடைசூழ் மதின்மீதே மதியங்
கடவாமை நெடுங்கொடியின் கரந்தகையுங் கடந்தைச்
சீர்நிலவு மறைஞான சம்பந்தன் எந்தை
திருவளரும் மலரடிகள் சென்னி வைப்பாம்.  6

நுதலிய பொருள்
(தொடக்கம்)

புறச்சமயத் தவர்க்கிருளாய் அகச்சமயத் தொளியாய்ப்
புகல் அவைக் களவாகிப் பொற்பணிபோல் அபேதப்
பிறப்பிலதாய் இருள்வெளிபோற் பேதமும் சொற் பொருள்போல்
பேதாபே தமும் இன்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதா யுடலுயிர்கண் ணருக்கன்
அறிவொளிபோல் பிறிவருவருமத் துவித மாகுஞ்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்கலுற்றாம்.  7

தீட்சாக்கிரமம்

மூவகையா ருயிர்வருக்க மலத்தார் கன்ம
மூலமலத் தார்மூன்று முடையாரன்றே
தீவகமா மெனவுருவாய் வந்து நாதன்
திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால்
பாவனையால் மிகுநூலா லியோகப் பண்பால்
பரவிவரு மவுத்திரியால் பாச நாச
மேவவரு ளுதவுமவுத் திரியிரண்டு திறனாம்
வியன்கிரியை ஞானமென விளம்பு மாறே.  8

விரும்பியமந் திராதிகார மர்ச்சனா திகார
மேவுமியோ காதிகார மெனச்சமய விசேடம்
வரும்பொருவில் நிருவாண மந்திரங்கள் பதங்கள்
வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள்
ளிரங்கடைவிற்றொகைபதினொன் றெண்பத் தொன்றைம்பத்தொன்
றிருநூற்றோ டிருபத்து நாலாறா றைந்திற்
பரந்தநெறி யறுவகையு மொருவிநினை வரிதாம்
பரபதத்து ளுயிர்விரவப் பயிற்று மன்றே.  9

சிவஞானத்தின் சிறப்பும் வகையும்

கிரியையென மருவுமவை யாவும் ஞாங்
கிடைத்தற்கு நிமித்தமெனக்கிளக்குமுண்மைச்
சரியைகிரி யாயோகத் தன்மையோர்க்குச்
சாலோக சாமீப சாரூ பங்கண்
மருவியிடு முயர்ஞான மிரண்டா மாறா
மலமகல வகலாது மன்னு போதத்
திருவருளொன் றொன்றதனைத் தெளிய வோதுஞ்
சிவாகமமென் றுலகறியச் செப்பும் நூலே.  10

நூல்வழியும் நூற்பெயரும்

தெரித்தகுரு முதல்வருயர் சிவஞான போதஞ்
செப்பினர்பின் பவர்புதல்வர் சிவஞான சித்தி
விரித்தனர்மற் றவர்கள்திரு வடிகள் போற்றி
விளம்பிநூ லவையிரண்டும் விரும்பினோக்கிக்
கருத்திலுறை திருவருளு மிறைவ னூலுங்
கலந்துபொது வுண்மையெனக் கருதி யானு
மருத்திமிக வுரைப்பன்வளர் விருத்த நூறு
மாசில்சிவப் பிரகாச மாகு மென்றே.  11

அவையடக்கம்

தொன்மையவா மெனுமெவையு நன்றாகா வின்று
தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா துணிந்த
நன்மையினார் நலங்கொண்மணி பொதியுமதன் களங்க
நவையாகா தெனவுண்மை நயந்திடுவர் நடுவாந்
தன்மையினார் பழமையழ காராய்ந்து தரிப்பர்
தவறுநலம் பொருளின்கட் சார்வாராய்ந்தறிதல்
இன்மையினார் பலர்புகழி லேத்துவரே திலருற்
றிகழ்ந்தனரே லிகழ்ந்திடுவர் தமக்கென வொன் றிலரே.  12

பொது வதிகாரம்

முதற் சூத்திரம்

1.பதி இயல்பு

பலகலையா கமவேத மியாவையினுங் கருத்துப்
பதிபசுபா சந்தெரித்தல்பதிபரமே யதுதான்
நிலவுமரு வுருவின்றிக் குணங்குறிக ளின்றி
நின்மலமா யேகமாய் நித்த மாகி
யலகிலுயிர்க் குணர்வாகி யசல மாகி
யகண்டிதமா யானந்த வருவா யன்றிச்
செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே.  13

முதல்வன் திருவுரு

நீடுபரா சத்திநிக ழிச்சா ஞான
நிறைகிரியை தரவதனை நிமலன் மேவி
நாடரிய கருணைதிரு வுருவ மாகி
நவின்றுபல கலைநாத விந்து வாதி
கூடுமொளி வளர்குடிலை மாயை மேவிக்
கொடுவினைகொள் தனுகரன புவன போகம்
பீடுபெற நிறுவியவை யொடுக்கு மேனி
பிறங்கியநிட் களசகளப் பெற்றி யாமே.  14

ஈங்கிதுவென் றதுகடந்த வியல்பி னானும்
ஈறுமுத நடுவொன்று மிலாமை யானும்
ஓங்கிவளர் ஞானமய னாத லானும்
உண்மைபிறர்க் கறிவரிய வொருமை யானும்
தாங்கரிய வெறுப்பினொடு விருப்பு மெல்லாஞ்
சார்வரிய தனிமுதல்வ னாத லானும்
நீங்கலரு முயிர்க்குயிராய் நிற்ற லானும்
நிறுத்திடுவ நினைந்தவுரு நிமலன் றானே.  15

முதல்வனது உண்மை

உலகமெலா மொருவனோ டொருத்தியொன்றென்
றுளதாகி நின்றளவி லொடுங்கும் பின்னு
மலமதனா லுளதாகு முருவ மாறி
வருவது பேர் வதுசெல்வ தாத லானும்
மலைவிலசேத தனமாயை யாதலானு
மணுக்களுரு வடையுமறி விலாமை யானும்
நிலவுதொழின் மருவுயுரு நிற்ற லானும்
நின்றெவையும் அளித்திடுவன் நிமலன் தானே.  16 

கந்தமலர் அயன்படைக்கும் உலக மெல்லாம்
கண்ணன்அளித் திடும் அவைஎம் கடவுள் தானே
அந்தமுற அழித்திடுவன் ஆத லாலே
அயன்அரியும் அவனதுயர் அதிகா ரத்து
வந்தமுறை தன்தொழிலே மன்னுவிப்பன் எல்லாம்
வருவிப்பன் விகாரங்கள் மருவான் வானின்
முந்திரவி எதிர்முளரி அலர்வுறுமொன் றலர்வான்
முகையாமொன் றொன்றுலரு முறையி னாமே.  17

ஏற்றஇவை அரனருளின் திருவிளையாட் டாக
இயம்புவர்கள் அணுக்கள்இடர்க் கடல்நின்றும் எடுத்தே
ஊற்றமிக அருள்புரிதல் ஏது வாக
உரைசெய்வர் ஒடுக்கம்இளைப் பொழித்தல் மற்றைத்
தோற்றமல பாகம்வரக் காத்தல் போகம்
துய்ப்பித்தல் திரோதாயி நிறுத்த லாகும்
போற்றலரும் அருள்அருளே யன்றி மற்றுப்
புகன்றவையும் அருளொழியப் புகலொ ணாதே.  18

இரண்டாஞ் சூத்திரம் 
பசு இலக்கணம்

எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
   இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை
அண்ணலரு ளால்நண்ணி அவை அவரா யதனால்
   அலகில்நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
   புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
   உற்றிடும்நற் பசுவருக்கம் எனஉரைப்பர் உணர்ந்தோர்.  19

பாச இலக்கணம்

ஏகமாய்த் தம்கால எல்லைகளின் மீளும்
எண்ணரிய சத்தியதாய் இருளொளிர இருண்ட
மோகமாய்ச் செம்பினுறு களிம்பேய்ந்து நித்த
மூலமல மாய்அறிவு முழுதினையும் மறைக்கும்
பாகமாம் வகைநின்று திரோதாயி சத்தி
பண்ணுதலான் மலமெனவும் பகர்வர்அது பரிந்து
நாகம்மா நதிமதியம் பொதிசடையான் அடிகள்
நணுகும்வகை கருணைமிக நயக்கும் தானே.  20

உன்னலரும் பரசிவன்தன் அருளாலே நாதம்
உதிக்கும்மிகுங் குடிலைதனில் விந்துவரும் நாதந்
தன்னில்அதி னொளிவளரும் சதாசிவராம் அவரில்
தயங்கவரும் ஈசர்வித்தை தனிஅளிப்பர் அதனால்
மன்னுவர்இவ் வகைஐவர் வாய்மையினால் முன்னே
வந்திடுமென் றுரைசெய்த விந்துவழா வகையே
முன்னுதவும் சூக்குமாதி ஒருநான்கும் என்று
மொழிந்திடுவர் அருங்கலைகள் முதிர்ந்து ளோரே. 21

உருவாதி சதுவிதமாய் ஒன்றொன் றொவ்வா
உண்மையதாய் நித்தமாய் ஒன்றா யென்றும்
அருவாகிக் கன்மமார் அணுக்கள் யார்க்கும்
ஆவார மாய்அசித்தாய் அசல மாகி
விரிவாய தன்செயலின் வியாபியாய் எல்லாம்
விரிந்தவகை புரிந்தடைவின் மேவியவை ஒடுங்க
வருகாலம் உயிர்களெல்லாம் மருவிடமாய் மலமாய்
மன்னியிடும் அரனருளால் மாயை தானே.  22

என்னையிது எனில்உலகுக் குபாதான மில்லை
இறைவனல தெனின் அசித்துச் சித்தினிடத் துதியா
மன்னியுள தேல்முதல்வன் என்கொல் என்னின்
மாயைதான் அசித்துருவாய் மருவ மாட்டா(து)
அன்னவனும் இதுவொழிய ஆக்க மாட்டான்
அசத்தனாம் எனின்அதுவும் அவன்போல் நித்தம்
முன்னவன்அவ் வசித்தைவிரித் தெவையும் ஆக்கும்
முதன்மைஅது கொடுத்ததென மொழிந்தி டாரே.  23

படைத்ததொரு படியின்றிப் பறவைபசு நாராய்ப்
பண்ணியதென் முன்னைவினைப் பான்மை யென்பர்
அடுத்தவினை உளதாயின் இறையேன் என்னில்
அசேதனம்மற் றவைஆவிக் கமைத்த தாகும்
எடுத்தவினை உருவுறுவ துயிரேல் தானே
இருவினைக்குத் தக்கஉடல் எய்து மென்னில்
சடத்திரளும் அகர்த்தாவாய் அறிவொன் றில்லாத்
தன்மையனுங் கூடவொரு சங்கை யின்றே.  24

அல்லல்மிக உயிர்க்கிவைதான் அணைத்த தீசன்
அருவினைகள் அருந்துதற்கோ வினையோ அன்றிச்
சொல்லிவரு மாயையோ அணுவை முந்தச்
சூழ்ந்ததெனும் உரைமுதலோர் தொடக்கி லார்பால்
ஒல்லைவரு மெனின்உளதாம் உயிருண் டாவே
உளதுமலம் மலமுளதாய் ஒழிந்த வெல்லாம்
நெல்லின்முளை தவிடுமிபோல் அநாதி யாக
நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்து மாறே.  24

அருத்திமிகும் கலைகாலம் நியதியுடன் வித்தை
அராகம்இவை அனந்தரால் மாயைதனி லாகும்
உருத்திரராற் கலையதனில் பிரகிருதி குணங்கள்
உளவாகும் ஆங்காரம் புந்திதனில் உதிக்கும்
தெரித்தவிது திரிவிதமாந் தைசதவை காரி
திகழ்தருபூ தாதியெனத் திருந்தியசாத் துவிதம்
விரித்தகுண மனம்புத்தி இந்திரிய மென்று
விளம்பியசோத் திராதிமுதல் விளங்கியிடும் விரிந்தே.  25

மன்னியகன் மேந்திரிய மானஇரா சதஞ்சேர்
வாக்காதி வைகாரி மருவிவரும் சத்தம்
தன்னைமுத லாகியதா மதமிகுமாத் திரைபின்
தருமிதனில் வான்அநிலம் அனல்புனல்மண் சத்தம்
முன்னதனில் வெளியாதி ஒன்றொன் றாகும்
முறையிலுறும் இருமைஅயன் முடிவா முன்னே
உன்னுசதா சிவராதி அதிபதிகள் ஒடுக்கம்
உதித்தஅடை வெனஉரைப்பர் உணர்ந்து ளோரே.  26

நண்ணியிடும் உருவதனுக் கேது வாகி
நானாபோ கங்களாய் நாசோற் பத்தி
பண்ணிவரும் ஆதலால் அனாதி யாகிப்
பலவாகி அணுக்கள்தொறும் படர்வ தாகி
எண்ணிவரு மனவாச கன்மத்தா லியற்றும்
இயல்பினதாய் மதிகதமாய் இருபயனாம் பாவ
புண்ணியமாய்ப் புலர்காலை மாயை மேவிப்
பொருந்தும் இது கன்ம மலம் புகலும் ஆறே.  27

கன்மநெறி திரிவிதம் நற்சாதி, ஆயுப், போகக்
கடனது என வரும், மூன்றும் உயிர் ஒன்றில் கலத்தல்
தொன்மையது; ஊழ் அல்லது உணவுஆகா; தானும்
தொடங்கு அடைவில் அடையாதே தோன்றும், மாறித்
தன்மை தரு தெய்விகம், முற்பௌதிகம், ஆன்மிகமாம்
தகையில் உறும் அசேதன சேதனத்தாலும் சாரும்,
நன்மையொடு தீமை தரு சேதனனுக்குஇவண் ஊண்
நாடில் அதன் ஊழ்வினையாய் நணுகும் தானே.  28

மேலைக்கு வருவினைஏ தென்னில் அங்கண்
விருப்புவெறுப் பெனஅறிஅவ் விளைவும் எல்லாம்
மூலத்த வினைப்பயில்வாம் என்னின் நாம்ஏன்
முற்றிஅதன் பயன்உனக்கு முளைக்கு மென்பர்
ஞாலத்து வினைகள்இரு திறனாகும் புந்தி
நண்ணாத வினை நணுகும்வினையென வொன் றிரண்டாம்
ஏலத்தான் இதம்அகித மாம்இதனால் வழுவா(து)
எய்தியிடும் புண்ணியபா வங்க ளென்றே.  29

உற்றதொழில் நினைவுரையின் இருவினையும் உளவாம்
ஒன்றொன்றால் அழியாதூண் ஒழியா துன்னில்
மற்றவற்றின் ஒருவினைக்கோர் வினையால் வீடு
வைதிகசை வம்பகரும் மரபில் ஆற்றப்
பற்றியது கழியும்இது விலையால் ஏற்கும்
பான்மையுமாம் பண்ணாது பலிக்கும் முன்னம்
சொற்றருநூல் வழியின்வரின் மிகுதி சோரும்
சோராதங் கதுமேலைத் தொடர்ச்சி யாமே.  30

பஞ்ச மலங்கள்

மோகமிக உயிர்கள்தொறும் உடனாய் நிற்கும்
   மூலஆ ணவம்ஒன்று முயங்கி நின்று
பாகமிக உதவுதிரோ தாயி ஒன்று
   பகர்மாயை ஒன்றுபடர் கன்ம மொன்று
தேகமுறு கரணமொடு புவன போகச்
   செயலாரும் மாமாயைத் திரட்சி ஒன்றென்(று)
ஆகமலம் ஐந்தென்பர் ஐந்தும் மாறா(து)
   அருளென்ப தரிதென்பர் அறிந்து ளோரே.  31

அவத்தை இலக்கணம் - கேவலாவத்தை

ஓங்கிவரும் பலஉயிர்கள் மூன்றவத்தை பற்றி
உற்றிடுங்கே வலசகல சுத்தமென உணர்க
ஈங்குவரும் கலாதியொடு குறிஉருவம் ஒன்றும்
இன்றிமல மன்றியொன்று மில்லையெனும் இயல்பாய்
ஆங்கறிவை அறிவரிதா அறிகருவி அணையா
ஆதலினால் இருள்மருவும் அலர்விழிபோல் அதுவாய்
நீங்கும்வகை யின்றிநித்த வியாபகமாய் அங்கண்
நிற்பதுகே வலமென்று நிகழ்த்தும் நூலே.  32

இன்மைமலம் மாயைகன்மம் என்றிரண்டே இறைதான்
இலங்குபல உயிர்களும்முன் புரிந்தஇரு வினையின்
தன்மைகளால் எவர்களுக்குந் தனுகரண புவனம்
தந்திடும்இங் கதனாலே இருபயனும் சார்ந்து
கன்மமெலாம் நேராக நேராதல் மருவக்
கடவுள்அரு ளால்எவையுங் கழித்திடுவன் அதனாற்
பின்மலமா னவைஅணுகா பெருகொளிமுன் புளதே
பெற்றிடுமென் றித்திறமென் பேசு மாறே.  33

மாயைமுத லெனவினையின் பான்மைமுத லெனவே
மன்னுபனை விதைமரபின் மயங்கும்மலம் சுத்தற்(கு)
ஏயுநெறி யென்கொல்அதன் இயல்பாயின் முத்தி
என்பதென்மற் றிவைநிற்க இருங்கலாதி உணர்வாய்
மேயபினர்த் தன்னுருவம் விளங்காமை விளக்கும்
மிகும்உலகந் தனில்என்னில் இவைவிடுங்கால் உணர்வுள்
தோயுநெறி இலதாதல் அறியாமை யெனநீ
சொல்லியது மலமென்பர் துணிந்து ளோரே.  34

அந்நியமா னவை உணர்த்தி அநந்நியமாய் நிறைந்த
அறிவறியா மையினானும் அருள்நிலவும் காலம்
தன்னில்அவ னேயாவு மாய்நின்ற தொன்மை
தாமுணர்த லானும்உயிர் தானெனவொன் றிலதாய்
மன்னியிடும் மலமாயை கன்மங்கள் மாறி
வந்திடும்இங் கிதுவழுவா தாதலினான் மனத்தால்
உன்னரிய திருவருளை ஒழியமலம் உளதென்(று)
உணர்வரிதால் அதனுண்மை தெரிவரிதாம் உனக்கே.  35

சகலாவத்தை

புகலுமலம் ஒழித்தற்குக் கலாதிமுதல் மாயை
   பொருந்தியிடும் அரனருளாற் போதம் தீபம்
சகலமெலாம் உடனாய வாறு போலத்
   தரும்அருளை மலம்உயிர்கள் சாராமல் மறைக்கும்
இகலிவரும் இவையுணரின் இருள்வெளியாந் தன்மை
   எய்தும்இவை தன்செய்தி இலங்கும் விந்துப்
பகர்வரிய உணர்வாகி ஒளியாய் உள்ளப்
   பான்மையினால் ஒருநாதம் படருந் தானே.  36

வாக்குக்கள்

வந்தடைந்து பின்னமாய் வன்னங்கள் தோற்றம்
வரும்அடைவு படஒடுக்கி மயிலண்ட சலம்நேர்
சிந்தைதனில் உணர்வாகும் பைசந்தி உயிரிற்
சேர்ந்துவரும் அவைமருவும் உருஎவையும் தெரித்து
முந்தியிடும் செவியில்உறா துள்ளுணர்வாய் ஓசை
முழங்கியிடும் மத்திமைதான் வைகரியில் உதானன்
பந்தமுறும் உயிரணைந்து வந்தமொழிச் செவியின்
பால் அணைய நிறைந்தபொருள் பகரும் தானே.  37

இத்தகைமை இறைஅருளால் உயிர்அறியும் அறிவுக்(கு)
ஈடாக வாடாதே ஈரிரண்டில் உரைத்த
வித்தைமுதல் ஐவரான் விளங்கு ஞானம்
மேவியிடும் எனஉரைப்பர் அசுத்த மாயை
வைத்தகலை தான்மூல மலம்சிறிதே நீக்கி
மருவும்வகை தெரிவிக்கும் வாயில்களின் பயனைப்
புத்திதர வித்தையிடை நின்றறிவை உயிர்க்குப்
பொருந்தியிடும் வகைபுணரும் புனிதசத்தி புணர்ந்தே.  38

பேசரிய அராகம்தம் கன்மத்துக் கீடாய்ப்
பெற்றதனில் ஆசைதனைப் பெருகுவிக்கும் நியதி
தேசமிகும் அரசர்தரும் ஆணை செய்தி
செய்தவரைத் துய்ப்பிக்கும் செய்கை போல
நேசமுறு தம்கன்மம் நிச்சயித்து நிறுத்தும்
நிகழ்காலம் கழிகாலம் எதிர்கால மென்றே
ஓசைதர வருங்காலம் எல்லைபலம் புதுமை
உறுவிக்கும் இறைசத்தி உடனாய் நின்றே.  39

ஐவகையால் உறுபயன்கள் நுகரவருங் காலம்
அதுபுருட தத்துவமென் றறைந்திடுவர் அறிந்தோர்
மெய்வகைய கலாசுத்தி தனின்இதற்கும் சுத்தி
மேவியிடும் வகைதானும் விரும்பியநூல் விளம்பும்
செய்வகையின் தொடர்ச்சியிங்குத் தோன்றுவிக்கும் குணத்தின்
சேர்வுபுரி பிரகிருதி திரிகுணமாம் அவைதாம்
இவ்வகையிற் சாத்துவித ராசததா மதமாய்
இயம்புவர்கள் ஒன்றிரண்டு குணம்ஏற்க உடைத்தே.  40

அலகில்குணம் பிரகாசம் லகுதைவியா பிருதி
அடர்ச்சிமிகுங் கவுரவம்அ நியமம்இவை அடைவே
நிலவியிடும் மும்மூன்றும் உயிரொன்றில் கலந்தே
நிற்கும் இவை நிறைபுலனின் பயன்எவையும் கவரும்
குலவிவரு போகங்க ளிடமாய் மாறாக
குறைவில்ஒளி யாம்அலகில் புலனிடத்தின் ஒருமை
பலவகையும் உடையதாய்ப் பரனருளாற் புந்தி
பஞ்சாசற் பாவகமும் பண்ணுவிக்குந் தானே.  41

ஆனதனு வதனிலுறும் அநிலனையும் இயக்கி
ஆங்காரம் நீங்காத அகந்தைக்கு வித்தாய்
யானலது பிறரொருவர் எனையொப்பார் புவியின்
இல்லையெனும் இயல்பினதாய் இந்திரியம் புலன்கள்
தாம்நுகரும் அளவில்அதின் முந்தியுறும் இச்சை
தானுருவாய்ச் சங்கற்ப சதாகதியும் தந்து
மானதமா னதுநிற்கும் சிந்தைநினை வையம்
வந்துதரு மனமொழிய வகுப்பொ ணாதே.  42

சொன்னமுறை செவிதுவக்கு நோக்கு நாக்குத்
துண்டம்இவை ஐந்திற்கும் தொகுவிடய மாக
மன்னியசத் தப்பரிச ரூபரச கந்தம்
மருவியிடும் இவைஅடைவே வாக்குப் பாதம்
பின்னர்வரு பாணிமிகு பாயுவினோ டுபத்தம்
பேசலுறும் ஐந்திற்கும் பிறங்கொலிகொள் வசனம்
உன்னரிய கமனதா னவிசர்க்கா னந்தம்
உற்றதொழில் பெற்றிடுவ துண்மை யாமே.  43

முந்தியஐம் பூதங்கள் வானாதி யாக
முயங்கியநற் செவி, மெய், கண், நா, நாசி முறையால்
இந்தவயி னின்றுவரும் ஐம்புலனும் உயிர்தாம்
எய்தும்வகை தம்முருவின் இலங்கியிடும் புறத்தும்
வந்தடைய இடங்கொடுக்கும் நிரந்தரமாய் வானம்
வாயுமிகச் சலித்தெவையுந் திரட்டும்தீ வெம்மை
தந்தவைசுட் டொன்றுவிக்கும் நீர்குளிர்ந்து பதமே
தரும்உரத்துத் தரிக்கும்இது தரணி தானே.  44

இந்நிரையின் ஐந்துசுத்தம் ஏழ்சுத்தா சுத்தம்
எண்மூன்றும் அசுத்தமெனும் இவைமுப்பத் தாறாம்
மன்னியதத் துவங்களிடை மயங்கிநெடுந் துயர்தாம்
மருவும்உரு நிலையழிய வரும்பொழுது வரியார்
பன்னகம்அண் டசம் கனவு படர்வகையே முன்னம்
பகரவரும் கலாதிநிலை பரவியசூக் குமமாம்
தன்உருவில் அணைந்துபயன் அருந்திஅரன் அருளால்
தரையினிடை வருமென்று சாற்றும் நூலே.  46

தோற்றியிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கின்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தென்றும்
ஊர்வபதி னைந்தமரர் பதினொன்றோ டுலவா
மாற்றருநீர் உறைவனநற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து மானிடர்ஒன் பதின்மர்
ஏற்றியொரு தொகைஅதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.  47

சுத்தாவத்தை

இனையபல பிறவிகளின் இறந்துபிறந் தருளால்
இருவினைகள் புரிந்தருந்தும் இதுசகலம் அகலா
முனம்மருவும் இருபயனும் ஒருகாலத் தருந்த
முந்தநுக ருந்துபயன் அந்தமுற வந்த
வினையும்எதிர் வினையும்முடிவினை உதவு பயனால்
நேராக நேராதல் மேவுங் கால்முற்
சினமருவு திரோதாயி கருணை யாகித்
திருந்தியசத் திநிபாதந் திகழு மன்றே.  48

சத்திநிபாதம்

நாடியசத் திநிபாதம் நாலு பாதம்
நண்ணும்வகை எண்ணரிய ஞான பாதம்
கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானக்
கூத்தன்ஒரு மூர்த்திகொடு குறுகி மோகம்
நீடியகே வலசகலம் நிகழா வாறு
நிறுத்திமலம் அறுக்கும் இது நிலையார் சுத்தம்
கேடில்புகழ் தரும்சரியை கிரியா யோகக்
கேண்மையரேல் இவைஉணர்த்தக் கிளக்கும் நூலே.  49

முத்தி பேதங்களதியல்பு

அரிவையரின் புறுமுத்தி கந்த மைந்தும்
அறுமுத்தி திரிகுணமும் அடங்கு முத்தி
விரிவுவினை கெடுமுத்தி மலம்போம் முத்தி
விக்கிரக நித்தமுத்தி விவேக முத்தி
பரவுமுயிர் கெடுமுத்தி சித்தி முத்தி
பாடாண முத்திஇவை பழிசேர் முத்தி
திரிமலமும் அகலஉயிர் அருள்சேர் முத்தி
திகழ்முத்தி யிதுமுத்தித் திறத்த தாமே.  50

உண்மை அதிகாரம்

இங்கிவை பொது இயம்பும் என்பர்கள் இதன்மே லான்மாத்
தங்கிய அஞ்ச வத்தை தன்னுண்மை உணர்த்துந் தன்மை
பொங்கொளி ஞான வாய்மை அதன்பயன் புனிதன் நாமம்
அங்கதின் அணைந்தோர் தன்மை அறைகுவன் அருளி னாலே.  51

மூன்றாஞ் சூத்திரம்

ஆன்ம இலக்கணம்

செறிந்திடும் உடலுள் மன்னிச் சேர்புலன் வாயில் பற்றி
அறிந்ததில் அழுந்தும் ஒன்றும் அறிந்திடா அறியுந் தன்மை
பிறிந்தடை அஞ்ச வத்தை பெருகிய மலத்தாற் பேணி
உறுந்தனி அதீதம் உண்மை உயிர்க்கென உணர்த்து மன்றே.  52

உருஉணர் விலாமை யானும் ஓரொரு புலன்க ளாக
மருவிநின் றறித லானும் மனாதிகள் தம்மின் மன்னித்
தருபயன் நுகர்த லானும் உயிர்சட மாத லானும்
அருவினை உடலுள் ஆவி அறிவினால் அறியு மன்றே.  53  

அறிவெனில் வாயில் வேண்டா அன்றெனில் அவைதாம் என்னை
அறிவதை உதவு மென்னில் அசேதனம் அவைதா மெல்லாம்
அறிபவன் அறியுந் தன்மை அருளுவன் என்னி லான்மா
அறிவில தாகும் ஈசன் அசேதனத் தளித்தி டானே.  54

அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி யென்றும்
அறிவினால் அறியொ ணாதேல் ஆவதொன் றின்மை தொன்மை
அறிவுதான் ஒன்றை முந்தி அதுவது வாகக் காணும்
அறிவுகாண் அசத்து மற்ற தறிவினுக் கறியொண் ணாதே.  55

எவ்வறி வசத்த றிந்த தெனில்உயிர் அறியா தீசன்
அவ்வறி வறியான் அல்ல தசேதனம் அறியா தாவி
செவ்விய கருவி கூடித் தெரிவுறா தருளிற் சேரா
ஒவ்விரு வகைய தென்னில் ஒளியிரு ளொருங்கு றாவே.  56

சத்திது வென்ற சத்துத் தானறி யாத சத்தைச்
சத்தறிந் தகல வேண்டா அசத்திது சத்தி தென்றோர்
சத்திருள் ஒளிய லாக்கண் தன்மைய தாம்அ சத்தைச்
சத்துடன் நின்று நீக்குந் தன்மையாற் சதசத் தாமே.  57

கண்ணொளி விளக்க ளித்துக் காட்டிடு மென்னின் முன்னம்
கண்ணொளி ஒன்று மின்றாம் விளக்கொளி கலந்த வற்றைக்
கண்ணொளி அகல நின்றே கண்டிடும் வேறு காணாக்
கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடுங் கருத்தொன் றன்றே.  58

ஒரிடத் திருத்தல் மாயா உருநிறைந் திடுதல் ஒன்றாம்
பேரிடத் துறைதல் தானே பிறங்கறி வாகி நிற்றல்
சோர்வுடைச் சடநி கழ்த்தல் எனுமிவை சொல்லார் நல்லோர்
ஓர்விடத் துணரும் உண்மை ஒளிதரும் உபலம் போலும்.  59

நான்காஞ் சூத்திரம்

அவத்தைத் தன்மை

எண்ணஒன் றிலாத அதீதம் எய்திய துரியத் தொன்று
நண்ணிடும் சுழுத்தி தன்னின் நயந்துள தொன்று பின்னும்
அண்ணிடும் கனவு தன்னில் ஆறேழாம் சாக்கி ரத்தின்
கண்ணுறும் அஞ்சா றாய கருவிகள் காணுந் தானே.  60

இவ்வகை அவத்தை தன்னில் எய்திடும் கரண மெல்லாம்
மெய்வகை இடத்தி லுற்று மேவுமா கண்டு மிக்க
பொய்வகைப் பவம் அகற்றப் புரிந்திடில் அருளா லாங்கே
ஐவகை அவத்தை உய்க்கும் அறிவினால் அறிந்து கொள்ளே.  61

நீக்கமில் அதீத மாசு நிறைந்தகே வலமா நீர்மை
சாக்கிரங் கலாதி சேர்ந்த சகலமாந் தன்மை யாகும்
ஊக்கமில் இரண்டும் கூடா தொழியவோர் நிலையில் நீடும்
சாக்கிர அதீதம் சுத்தத் தகைமைய தாகுந் தானே.  62

ஐந்தாஞ் சூத்திரம்

உணர்த்து முறைமை

மருவிய பொறியில் ஒன்றும் மாபூதம் ஐந்தி லொன்றும்
கருவிகள் நான்கும் நீங்காக் கலாதிகள் ஐந்தும் கூடி
ஒருபுலன் நுகரும் இந்த ஒழுங்கொழிந் துயிரும் ஒன்றைத்
தெரிவுறா தவனொ ழிந்தத் திரள்களும் செயலி லாவே.  63

தனக்கென அறிவி லாதான் தானிவை அறிந்து சாரான்
தனக்கறி விலாத வாயில் தான்அறி யாது சாரா
தனக்கென அறிவி லாதான் தத்துவ வன்ன ரூபன்
தனக்கென அறிவா னால்இச் சகலமும் நுகருந் தானே.  64

கண்டறி புலன்கள் காணும் கருத்தினால் ஒருத்தன் ஞானம்
கொண்டுளம் அறியு மென்னில் கொள்பவன் முதலி யாகும்
மண்டிய உணர்வு யிர்க்கா மன்னிநின் றறியு மென்னில்
உண்டிட வேண்டு வானுக் கொருவன்வே றுண்ட லாமே.  65

இருள்நனி இரவி தான்வந் திரித்தலும் இரவில் எண்ணும்
பொருள்நிலை கண்டு மாந்தர் பொருந்திடு மாறு போல
மருள்நிலை யெங்கு நீங்க மகிழ்ந்துயிர் தன்னுள் மன்னும்
அருளையும் ஒழிய ஞாலத் தறிந்தவா றறியு மன்றே.  66

அறிந்திடும் மனாதி வாயி லானவை அவன்ற னாலே
அறிந்திடும் என்றும் ஒன்றும் அறிந்திடா அவைபோல் யாவும்
அறிந்திடும் அறியுந் தன்மை அறிந்திடா கன்மத் தொன்மை
அறிந்தவை நுகரு மாறும் அருளுவன் அமலன் தானே.  67

ஆறாஞ் சூத்திரம்

ஞானவாய்மை

காட்டிடும் கரண மொன்றும் இல்லையேற் காணொ ணாதாம்
நாட்டிய இவற்றான் ஞானம் நணுகவும் ஒண்ணா முன்னம்
ஈட்டிய தவத்தி னாலே இறைஅரு ளுருவாய் வந்து
கூட்டிடும் இவற்றை நீக்கிக் குரைகழல் குறுகு மாறே.  68

ஏழாஞ் சூத்திரம்

பன்னிறங் கவரும் தொன்மைப் படிகநீ டொளியும் பன்மை
மன்னிலங் கியல்பும் தந்த வளரொளி போல வையம்
தன்னகம் பயிலும் நற்சிற் சடங்களின் தன்மை தாவா
நன்னலம் பெறநி றைந்த ஞானமே ஞான மென்பர்.  69

மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும் மருளெனில் இருளாய் நிற்கும்
மாயைமா மாயை மாயா வருமிரு வினையின் வாய்மை
ஆயஆ ருயிரின் மேவும் அருளெனில் ஒளியாய் நிற்கும்.  70

எட்டாஞ் சூத்திரம்

ஞானவாய்மையின் பயன்

தேசுற மருவும் ஆன்ம தெரிசனம் ஆன்ம சுத்தி
ஆசிலா ஆன்ம லாபம் ஆகமூன் றாகும் மூன்றும்
பாசம தகல ஞானம் பற்றல்தான் பணியை நீத்தல்
ஏசில்நே யத்த ழுந்தல் எனுமிவற் றடங்கு மன்றே.  71

ஆன்ம தரிசனம்

தன்னறி வதனால் ஏதும் தனக்கறி வில்லை யேனும்
தன்னறி வாக எல்லாம் தனித்தனி பயன ருந்தும்
தன்னறி வறியுந் தன்மை தன்னாலே தனைய றிந்தால்
தன்னையும் தானே காணும் தானது வாகி நின்றே.  72

தத்துவ மான வற்றின் தன்மைகள் உணருங் காலை
உய்த்துணர்ந் திடஉ திப்ப தொளிவளர் ஞான மாகும்
அத்தன்மை அறியு மாறும் அகன்றிட அதுவாய் ஆன்மாச்
சுத்தமாம் சுத்த ஞானத் தொருமுதல் தோன்று மன்றே.  73

உறை தரும்உணர்வு மன்றி அதன்முதல் உள்ள தென்றிங்(கு)
அறைவதென் என்னில் அண்ணல் அருளெனு மதுவே யன்றி
நிறையொளி முதல தன்றி நின்றிடா நிமல னாகும்
இறையவன் முதல வன்றன் இலங்கருள் சத்தி யாமே.  74

சுத்தமாம் சத்தி ஞானச் சுடராகும் சிவமொ ழிந்தச்
சத்திதான் இன்றாம் முன்னைத் தகவிலா மலங்கள் வாட்டி
அத்தனை அருளும் எங்கும் அடைந்திடும் இருள் அகற்றி
வைத்திடும் இரவி காட்டும் வளரொளி போல்ம கிழ்ந்தே.  75

ஒன்பதாஞ் சூத்திரம்

ஆன்ம சுத்தி

புகலரும் அசத்தர் தம்பால் பொருந்திய அலகை யேபோல்
அகிலமும் உணரு மீசன் அருளுயிர் மேவ லாலே
சகலமும் நிகழ வேண்டுந் தலைவன்ஐந் தொழிலுந் தானே
இகலற இயற்றல் வேண்டும் என்றது நன்றி யின்றே.  76

இன்றுநோக் குரைந டக்கும்
இயல்பிலோற் கினைய வாய்ந்து
நின்றதோர் அலகை நேர்ந்தால்
நிகழ்வதென் அதுபோ லுள்ளத்(து)
ஒன்றிய உணர்வு தம்பால்
உள்ளது நிகழ்த்தும் ஈசன்
தன்தொழில் நடாத்தும் மேனி
தனக்கெனக் கொண்டு தானே.  77

இந்நிலை தன்னில் மன்னி எய்திடும் கலாதி போதம்
தன்னள வறிந்து நிற்கும் தகவிலா மலங்கள் நீத்த
அந்நிலை கரணம் ஆகா வகையதில் அறிவ டங்கி
மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்று மன்றே.  78

அடைபவர் சிவமே யாகும் அதுவன்றித் தோன்று மென்ற
கடனதே னென்னில் முன்னம் கண்டிடார் தம்மைப் பின்னும்
தொடர்வரும் அருளி னாலே தோன்றுமா காணா ராயின்
உடையவன் அடிசேர் ஞானம் உணர்தலின் றணைத லின்றே.  79

பத்தாஞ் சூத்திரம்

ஆன்ம லாபம்

பொற்புறு கருவி யாவும் புணராமே அறிவி லாமற்
சொற்பெறும் அதீதம் வந்து தோன்றாமே தோன்றி நின்ற
சிற்பர மதனால் உள்ளச் செயலறுத் திட உதிக்கும்
தற்பர மாகி நிற்றல் சாக்கிரா தீதந் தானே.  80

ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமா றுணர்ந் தொடுக்க
ஒடுங்கிடும் என்னில் நின்ற தொடுங்கிடா கரண மெல்லாம்
ஒடுங்கிட ஒடுங்க உள்ள உணர்வுதா னொழியும் வேறாய்
ஒடுங்கிடின் அன்றி மற்ற உண்மையை உணரொ ணாதே.  81

பற்றிடும் கருவியாவும் படர்ந்துணர் வளிக்குங் காலை
உற்றறிந் திடுவ தொன்றின் உணர்வினின் உண்மை யாகும்
மற்றது பகல்வி ளக்கின் மாய்ந்திட வருவ துண்டேல்
பெற்றிடும் அதனை மாயப் பிறப்பினை அறுக்க லாமே.  82

முந்திய ஒருமை யாலே மொழிந்தவை கேட்டல் கேட்டல்
சிந்தனை செய்தல் உண்மை தெளிந்திடல் அதுதா னாக
வந்தவா றெய்தல் நிட்டை மருவுதல் என்று நான்காம்
இந்தவா றடைந்தோர் முத்தி எய்திய இயல்பி னோரே.  83

ஞான நிட்டை

பாசமா ஞானத் தாலும் படர்பசு ஞானத் தாலும்
ஈசனை உணர வொண்ணா திறைஅருள் ஞானம் நண்ணித்
தேசுறும் அதனால் முன்னைச் சிற்றறி வொழிந்து சேர்ந்து
நேசமோ டுயர்ப ரத்து நிற்பது ஞான நிட்டை.  84

உபாயநிட்டை

விளம்பிய வகையில் நிட்டை மேவிடல் அரிதேல் முன்னம்
அளந்தறி வளித்த வற்றின் அளவுமற் றவற்றி னாலே
உளங்கொளுந் தனையு முள்ளபடியுமுற் றுணர்ந்து செவ்வே
தளர்ந்திடா துவப்ப மற்றத் தன்மைய தாகுந் தானே.  85

பாவிக்கின் மனாதி வேண்டும் பயனிலை கரணம் நீத்துப்
பாவிப்பன் என்னில் என்ன பழுதுள பாவ கத்தால்
பாவிக்க ஒண்ணா னென்று பாவிப்பன் என்னின் நீயென்
பாவிக்க வேண்டா ஆண்ட பரனருள் பற்றி னோர்க்கே.  86

ஒன்றிரண் டாகி ஒன்றின் ஒருமையாம் இருமை யாகி
ஒன்றிலொன் றழியும் ஒன்றா தென்னின்ஒன் றாகா தீயின்
ஒன்றிரும் புறழின் அன்றாம் உயிரின்ஐந் தொழிலும் வேண்டும்
ஒன்றிநின் றுணரு முண்மைக் குவமைஆ ணவத்தோ டொன்றே.  87

அழிந்திடும் பாசம் என்னில்
நித்தமென் றுரைத்தல் வேண்டா
அழிந்திடா தென்னின் ஞானம்
அடைவது கருத வேண்டா
அழிந்திடும் சத்தி நித்தம்
அழிந்திடா ஒளியின் முன்னர்
அழிந்திடும் இருளும் நாசம்
அடைந்திடா மிடைந்தி டாவே.  88

எல்லையில் பிறவி நல்கும் இருவினை எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும் ஏன்ற உடற்பழ வினைய தூட்டும்
தொல்லையில் வருதல் போலத் தோன்றிரு வினைய துண்டேல்
அல்லொளி புரையும் ஞானத் தழலுற அழிந்து போமே.  89

ஐந்தெழுத் தருள்நிலை

பந்தமா னவைஅ றுத்துப் பவுதிகம் உழலும் எல்லைச்
சந்தியா தொழியா திங்குத் தன்மைபோல் வினையுஞ் சாரும்
அந்தம்ஆ திகள்இ லாத அஞ்செழுத் தருளி னாலே
வந்தவா றுரைசெய் வாரை வாதியா பேதி யாவே.  90

திருவெழுத் தஞ்சில் ஆன்மாத் திரோதமா சருள்சி வஞ்சூழ்
தரநடு நின்ற தொன்றாந் தன்மையுந் தொன்மையாகி
வருமந மிகுதி யாலே வாசியி லாசை யின்றிக்
கருவழிச் சுழலு மாறுங் காதலார்க் கோத லாமே.  91

ஆசுறு திரோத மேவா தகலுமா சிவமுன் னாக
ஓசைகொள் அதனில் நம்மேல் ஒழித்தரு ளோங்கும் மீள
வாசியை அருளும் மாய மற்றது பற்றா உற்றங்(கு)
ஈசனில் ஏக மாகும் இதுதிரு எழுத்தின் ஈடே.  92

பதினொராஞ் சூத்திரம்

அணைந்தோர் தன்மை

தீங்குறு மாயை சேரா வகைவினை திரிவி தத்தால்
நீங்கிட நீங்கா மூல நிறைஇருள் இரிய நேயத்(து)
ஓங்குணர் வகத்த டக்கி உளத்துளின் பொடுங்க நேரே
தூங்குவர் தாங்கி ஏகத் தொன்மையில் துகளி லோரே.  93

குறிப்பிடம் காலம் திக்கா சனம்கொள்கை குலம்கு ணம்சீர்
சிறப்புறு விரதம் சீலம் தபம்செபம் தியானம் எல்லாம்
மறுத்தற வொழிதல் செய்தல் மருவிடா மன்னு செய்தி
உறக்குறு பவர்போல் வாய்மை ஒழிந்தவை யொழிந்து போமே.  94

அகம்புற மென்றி ரண்டால் அர்ச்சனை புரியும் இந்தச்
சகந்தனில் இரண்டு மின்றித் தமோமய மாகி எல்லாம்
நிகழ்ந்திட மகிழ்ந்து வாழும் நீர்மையார் போல ஞானம்
திகழ்ந்தகம் புறம்எ னாத செம்மையார் நன்மை யாரே.  95

ஞான யோகம்

அண்டம்மே விட அனைத்தும் அனைத்தையும் அண்டம் மேவிக்
கொண்டல்போல் எவையும் ஞானங் குறைவிலா நிறைத லாலே
கண்டதோர் பொருளை அந்தக் கருத்தினால் காணில் தானே
அண்டநா யகனார் மேனி யானதேல் ஐய மின்றே.  96

ஞானக்கிரியை

மண்முதற் கரண மெல்லாம் மறுஅசத் தாக்கி ஞானக்
கண்ணினில் ஊன்றி அந்தக் கருத்தினால் எவையும் நோக்கி
எண்ணிஅஞ் செழுத்து மாறி இறைநிறை வுணர்ந்து போற்றல்
புண்ணியன் தனக்கு ஞான பூசையாய்ப் புகலு மன்றே.  97

ஞானச்சரியை

தொண்டர் களிடத்தும் வானோர் தொழுந்திரு மேனி தானும்
அண்டரும் கண்டி லாத அண்ணலே எனவ ணங்கி
வெண்தர ளங்கள் சிந்த விழிமொழி குழறி மெய்யே
கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரே.  98

நூற்கருத்து

நிலவுல காய தாதி நிகழ்சிவாத் துவிதாந் தத்துக்
குலவின ரளவ ளாவாக் கொள்கைய தாகி வேதத்
தலைதரு பொருளா யின்பாய்த் தாவில்சற் காரியத்தாய்
மலைவறு முணர்வாற் பெத்த முத்திகண் மதித்தா மன்றே.  99

நூல் உபதேச முறைமை

திருவருள் கொடுத்து மற்றிச் சிவப்பிர காச நன்னூல்
விரிவது தெளியு மாற்றால் விளம்பிய ஏது நோக்கிப்
பெருகிய உவமை நான்கின் பெற்றியில் நிறுவிப் பின்முன்
தருமலை வொழியக் கொள்வோன் தன்மையிற் சாற்ற லாமே.  100

 

Related Content

Saiva Siddhanta Lectures

வினா வெண்பா நூலாசிரியர் - உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.

போற்றிப் பஃறொடை

கொடிக்கவி நூலாசிரியர்: உமாபதி சிவாச்சாரியார் (காலம்: கி.பி.1

நெஞ்சு விடு தூது நூலாசிரியர் - உமாபதி சிவாச்சாரியார் (காலம்: