logo

|

Home >

quotes >

thiru-vi-kas-advice-to-amil-saivites-saivathin-samarasam

திரு வி க - சைவத்தின் சமரசம்

சைவத்தின் சமரசம் - சில குறிப்புகள்

"சைவம் அருணெறி. அருளாளர்களே ! உலகை உற்று நோக்குங்கள்; உலகில் எந்நெறி பெருகி இருக்கிறது; அருணெறியா ? மருணெறியா ? உன்னுங்கள் ! கொலைச் சாலைகளின் பெருக்கை என்னென்று கூறுவது ! கொலைக் கருவிச் சாலைகளின் பெருக்கை என்னென்று கூறுவது ! அந்தோ ! உள்ளம் நடுங்குகிறது ! இக்கொலைப் பெருக்கிற்குக் காரணம் யாவர் ? சீவகாருண்யத்தை மூலதர்மமாகக் கொண்டுள்ள சைவர்களாகிய நீங்களல்லவா ? சைவர்களே ! உங்கள் சமயம் யாது ? நீரில் மூழ்குவதா ? நித்தம் நித்தம் துணி தோய்ப்பதா ? நீறிடுவதா ? அனுட்டானஞ் செய்வதா ? கோயில் வலம் வருவதா ? அன்று; அன்று. இவை யாவும் புறவொழுக்கங்களாகும். சீவகாருண்ய நெறியே உங்கள் நெறி. அ·தில்லையேல், குளித்தலும் பூசனையும் பிறவும் என்னாம் ? நீங்கள் உங்கள் அருள் தொண்டை ஆற்றி இருப்பின் உலகில் உயிர்க்கொலை நிகழுமா ? புலைப் புசிப்பு நிகழுமா ? உயிர்க்கொலையும் புலைப் புசிப்பும் மடங்களையுந் தீண்டுமளவு பரவியிருப்பதைக் கவனிக்கின்றீர்களா ? சைவ உலகின் கவலையீனமென்னே ! என்னே ! இனி அருள் உலகம் மறையுமோ என்னும் அச்சம் உண்டாகிறது. உங்கள் ஒற்றுமை இன்மை, உழைப்பின்மை, சித்தாந்த ஞானத்தை உலகுக்கு அறிவுறுத்த முன் வராத 'தன்னலம்' உலகைத் துன்புறுத்துகின்றன. "நஞ்சமயம் தமிழர்க்கே உரித்து - அது தமிழ் நாட்டளவிலே கட்டுப்பட்டுக் கிடத்தல்வேண்டும்" என்னும் குறுகிய நோக்கத்தை உதறித்தள்ளுங்கள்; நானாபக்கங்களிலும் அருணெறியோம்ப முயலுங்கள். பரந்த நோக்குடைய ஒரு கொள்கையை - மன்பதைக்குரிய ஒரு சமயத்தைப் பிறர்க்குப் பயன்படுத்தாது அதைச் சிறைப்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் அறமாமோ ? எத்துணையோ உயிர்கள் அருளுணர்வு பெறுவதை மறிப்பது மறச்செயலன்றோ ? அதனினும் வன்கண் - கொடுமை - கொலை - வேறொன்றுண்டோ ? தானத்திற் சிறந்த தானம் எது ? ஞான தானமன்றோ ? அதையா தடுப்பது ? ஆண்டவன் அருள் அமுதைப் பருகச் 'சேரவாருஞ் செகத்தீரே' என்று உங்கள் ஆன்றோர் உலகை நோக்கிக் கூவி அழைத்திருப்பதைக் கருதுங்கள் ..............................................

உங்களுக்கு என்ன இல்லை ? அறிவு நூல்கள் இல்லையா ? அன்பு நூல்கள் இல்லையா ? அருணூல்கள் இல்லையா ? எல்லாம் உண்டு. வேண்டற்பாலது எழுச்சியே. நெருப்பிடை நின்ற ஞானசம்பந்தரை நினையுங்கள்; நீற்றரையில் கிடந்து கடலில் மிதந்த நாவரையரை நினையுங்கள்; ஆண்டவனைத் தூது கொண்ட ஆண்டகையை நினையுங்கள்; ஐயனை மண் சுமப்பித்த அன்பரை நினையுங்கள். நினைந்து நினைந்து ஊக்கங்கொள்ளுங்கள். நீலகண்டர் உறுதியும், இயற்பகையின் ஈகையும், மெய்ப்பொருளின் பொறுமையும், கண்ணப்பரின் கனிவும், மங்கையர்க்கரசியின் வீரமும் எங்கே போய்விட்டன ? பிறர்க்குழைக்க நீங்கள் புறப்பட்டால் இம்மாண்புகளெல்லாம் உங்களிடத்தில் பொங்கியெழும் என்பது திண்ணம். மெய்கண்ட சாத்திரம் என்னும் ஞானவாள் இருக்கும்பொழுது உங்களுக்கென்ன அச்சம் ? ...............................

அருளுலகம் உங்களை அழைக்கிறது, செவி சாயுங்கள். அன்புளங்கொண்டு எழுங்கள். தொண்டாற்றப் புறப்படுங்கள். வித்தகம் பேசவேண்டா; பணிசெய்யப் புறப்படுங்கள். உங்கள் அருணெறி உலகெலாம் பரவப்போவது உண்மை. மேல் நாடும் கீழ் நாடும் ஒன்றுபட்டு ஈனப் போகும் உலகு உங்கள் அருணெறியையே தழுவும். அந்நெறியே அவ்வுலகிற்கு நெறியாகும். ஆதலால், அந்நெறி வளர்க்க எழுங்கள்; எழுங்கள்."

- சைவத்தின் சமரசம். (1930).

For comments contact

Related Content