1.94 திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே. 1.94.1
ஞாலம் ஏழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே. 1.94.2
ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே. 1.94.3
அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே. 1.94.4
ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே. 1.94.5
அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே. 1.94.6
அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே. 1.94.7
அரக்க னார்வலி1, நெருக்கன் ஆலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே. 1.94.8
அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவம் ஓங்குமே. 1.94.9
ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே. 1.94.10
அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்தமிழ், செடிகள் நீக்குமே. 1.94.11
திருச்சிற்றம்பலம்.
பாடம்: 1. அரக்கனாள்வலி.