logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruppukalur-kurikalantaicai

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருப்புகலூர் - குறிகலந்தஇசை

திருப்புகலூர் - குறிகலந்தஇசை


1.2 திருப்புகலூர்    
        
பண் -  நட்டபாடை        
        
திருச்சிற்றம்பலம்        
        
    குறிகலந்தஇசை பாடலினான் நசை யாலிவ் வுலகெல்லாம்    
    நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறிப் பலி1பேணி    
    முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம் மொய்ம்மலரின்    
    பொறிகலந்த பொழில் சூழ்ந்தயலேபுய லாரும் புகலூரே.      1.2.1
        
    காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன் னொருபாகம்    
    மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின் னுரியாடை    
    மீதிலங்க அணிந் தானிமையோர் தொழ மேவும் மிடஞ்சோலைப்    
    போதிலங்குநசை யால்வரி வண்டிசை பாடும் புகலூரே.    1.2.2
        
    பண்ணிலாவும்மறை பாடலினானிறை சேரும் வளை யங்கைப்    
    பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந் தொழுதேத்த    
    உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவன் னிடமென்பர்    
    மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும் புகலூரே.    1.2.3
        
    நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம் மரண்மூன்றுஞ்    
    சீரின்மல்குமலை யேசிலையாகமு னிந்தா னுலகுய்யக்    
    காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்    
    ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும் புகலூரே.     1.2.4
        
    செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும் மடியார்மேல்    
    பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும் பணிவாரை    
    மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்ப ரருள்பேணிப்    
    பொய்யிலாதமனத் தார்பிரியாது பொருந்தும் புகலூரே.     1.2.5
        
    கழலினோசை சிலம்பின்னொலியோசை கலிக்கப் பயில்கானில்    
    குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தா ரிடமென்பர்    
    விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப் பொலிந் தெங்கும்    
    முழவினோசைமுந் நீர2யர்வெய்த முழங்கும் புகலூரே.    1.2.6
        
    வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடை தன்மேல் விளங்கும் மதிசூடி    
    உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த வுகக்கும் மருள்தந்தெம்    
    கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுள் ளிடமென்பர்3    
    புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும் புகலூரே.    1.2.7
                
    தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான் முடிதிண்தோள்    
    தன்னிலங்குவிர லால்நெரி வித்திசை கேட்டன் றருள்செய்த    
    மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும் மிடமென்பர்    
    பொன்னிலங்கு மணிமாளிகை மேல்மதி தோயும் புகலூரே.    1.2.8
        
    நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும் மடியார்கள்    
    ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந் தொழுதேத்த    
    ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மா னிடம்போலும்    
    போகம்வைத்தபொழி லின்நிழ லான்மது வாரும் புகலூரே.     1.2.9
        
    செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற் பொருளல்லாக்    
    கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள் ளிடம்போலும்    
    கொய்துபத்தர்மல ரும்புனலு ங்கொடு தூவித் துதிசெய்து    
    மெய்தவத்தின்முயல்வாருயர்வானக மெய்தும் புகலூரே.    1.2.10
        
    புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும் புகலூரைக்    1.2.11
    கற்று நல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன் தமிழ்மாலை    
    பற்றியென்றும்மிசை பாடியமாந்தர் பரமன் னடிசேர்ந்து    
    குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப் பொலிவாரே.    
        
        
    திருச்சிற்றம்பலம்    
        
    பாடம் 1. ஏறும்பலி, 2. முன்னீர், 3. கடவுட்கிடமென்பர்    

 

Related Content

Before I am unconscious....

Who is praiseworthy ?