logo

|

Home >

panniru-thirumurai >

thirugnanasambandhar-thevaram-thiruanniyur-manni-Yurirai

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருஅன்னியூர் - மன்னி யூரிறை


1.96 திருஅன்னியூர் - திருவிருக்குக்குறள்    
        
பண் -  குறிஞ்சி        
        
திருச்சிற்றம்பலம்        
        
        
    மன்னி யூரிறை, சென்னி யார்பிறை    
    அன்னி யூரமர், மன்னு சோதியே.    1.96.1
        
    பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்    
    குழகன் சேவடி, தொழுது வாழ்மினே.    1.96.2
        
    நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்    
    சோதி நாமமே, ஓதி உய்ம்மினே.    1.96.3
        
    பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்    
    சித்தர் தாள்தொழ, முத்த ராவரே.    1.96.4
        
    நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்    
    மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே.    1.96.5
        
    இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்    
    நன்பொ னென்னுமின், உம்ப ராகவே.    1.96.6
        
    அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்    
    எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே.    1.96.7
        
    தூர்த்தனைச் செற்ற, தீர்த்தன் அன்னியூர்    
    ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே.1    1.96.8
        
    இருவர் நாடிய, அரவன் அன்னியூர்    
    பரவு வார்விண்ணுக், கொருவ ராவரே.    1.96.9
        
    குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்    
    தொண்டு ளார்வினை, விண்டு போகுமே.    1.96.10
        
    பூந்தராய்ப் பந்தன், ஆய்ந்த பாடலால்    
    வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே.    1.96.11
        
        
    திருச்சிற்றம்பலம்.    
    பாடம்: 1. யுய்ம்மினே.    

 

Related Content